சபரிநாதன் கவிதைகள்

திறந்த வானமெங்கும் 

நட்சத்திரங்கள்

தெற்குச் சரிவினில் ஏறும்

பிறைநிலவு

மலை மேல் ஏற்றப்பட்ட நெருப்பு

காட்டு வழியில் தூரத்துக் குடிலின்

மஞ்சள் விளக்கு

வெளி முற்றத்தில் நல்ல காற்று

வயிற்றுச் சிசுவுக்கு விக்குகிறது

குனிந்து அமர்ந்திருக்கிறாள்

பிள்ளைத்தாச்சி

திறந்த வானமெங்கும்

நட்சத்திரங்கள்

***

பொறி

அம்மாவின் கண்ணில் பட்டது

மகனின் முதல் நரை ஒரு

தீப்பொறியென.

கண்ணிவெடியைச்

செயலிழக்கச் செய்யும் ஒருவரைப் போல

அவள் அதை அகற்றினாள்.

வதிமழை ஊற்றுகிறது

வன்னாத்தி மகள் தூக்குகளுடன் தட்டழிகிறாள்

கோணிக் கதகதப்புள் ஆடுகள் உரசியொட்டி நிற்கின்றன.

அவனைப் பற்றிய அவளது

எண் அற்ற கவலைகளில்

ஒன்று

கூடுகிறது.

***

ஆனை கட்டிய கல்

கோட்டை வீட்டின் திட்டி வாசலை 

ஒட்டியுள்ள கல்லில்தான்

ஜமீந்தார் கொடையளித்த

யானை கட்டப்பட்டிருந்தது.

கோட்டை வீட்டார் பிறகு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்தனர்.

அப்புறம் சீமைக்குச் சென்று செட்டிலாகிவிட்டதாக கேள்வி.

ஜமீந்தாரி ஒழிப்புச்சட்டம் அமலுக்கு வந்தபோது

வெட்டிக்கொண்டிருந்த கிணறு தாத்தாவுக்கே சொந்தமானது.

‘ஆனை கட்டிய கல் இது’ என்று அறிமுகம் செய்தது அவர்தான்.

இப்போதங்கே உத்தி பிரிக்கும் பையன்களுக்கு

அதுதான் கிரிக்கெட் ஸ்டம்ப்.

துரைச்சானிகள் போய்விட்டனர்

ராஜா ராணிகள் போய்விட்டனர்

போன வருடம் தாத்தா போய்ச்சேர்ந்தார்

கரண்டிவாயன் ஊசிவாலன் கூடவே பூநாரைமார்களும் போய்விட்டனர்

கொப்பரைகளைக் கழுவி முடித்த கிட்ணம்மா

வண்டியைத் தள்ளிக்கொண்டு நடக்கிறாள்.

ஆனை கட்டிய கல் அருகே

கருத்த இரவு.

***



***
Share:

பெண்மை எனும் பேரெழில் - கடலூர் சீனு

அண்மையில் நீலி இதழில் அவர் எழுதிய சீமோன் வெயில், ஹன்னா அரெண்ட் போன்ற ஆளுமைகள் வரலாற்றில் திரண்டு வந்த விதம், அவர்களின் தத்துவார்த்த நோக்கு, சாராம்ச தேடல் குறித்த கட்டுரைகள் சார்ந்து எழுத்தாளர் சைதன்யா வசம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சின் முடிவில் பெண்ணிய நோக்கு சார்ந்த பரிணாம வளர்ச்சியில் இன்றைய நிலையில் பெண்ணை பெண் என்று வரையறை செய்தாலே வரையறைகளை எதிர்க்கும் கோட்பாட்டாளர்கள் எவ்விதம் பாய்ந்து வந்து எப்படி அப்படியெல்லாம் வரையறை செய்யலாம்? யார் வரையறை செய்வது? எந்த ஆதிக்கத்தின் கருவி அந்த வரையறை என்றெல்லாம் கேட்டு கொந்தளிக்கிறார்கள் என்பதை சொன்னார். 

பெண் என்ற வரையறை இல்லாமல் பெண் குறித்த விஷயங்களை எப்படிப் பேசுவார்களாம்? சுவாரஸ்யம் உந்த க்ரோம் உதவியுடன் தங்கீலிஷ்ல் மாற்றி இன்றைய பெண்ணிய அயல்நில உரையாடல்கள் சிலவற்றை கொட்டாவிகளுக்கு இடையே வாசித்தேன். பெண் என்று வரையறை செய்வதில் இருந்தே  ______ மீதான முதல் ஆதிக்கம் துவங்குதாக அந்த அந்தர கோஷ்டியின் வாதம் துவங்கி முன்னே செல்கிறது. இந்த அந்தர கோஷ்டிக்கு ஒரு செயல்திட்டம் இருப்பதை, அவர்களின் உரையாடல்கள் துவங்கிய புள்ளி எது என்று பின்னால் சென்று தேடும்போது புரிந்தது.

2000 களுக்கு பிறகு பெருகிய நுகர்வு பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக ஆதரவாகவும், அந்த பொருளாதார அமைப்புக்கு எதிராக இருக்கும் எதையும் அதன் கருத்தியல் அடித்தளத்தை உடைக்கும் வண்ணம் செயல்படுவது இந்த அந்தர கோஷ்டிகளின் செயல்திட்டங்களில் ஒன்று.

இரண்டு உலக போர்களுக்குப் பிறகு இயந்திரமாக்கலுக்கு எதிரான பார்வையாக எமர்சன் தோரோ என பல்வேறு ஆளுமைகள் வழியே இயற்கை குறித்த உயிர்ச்சூழல் நோக்கு உலகு தழுவி வலுப்பெற்று விரிந்தது. அதன் பல்வேறு விளைவுகளில் ஒன்றாக ரேச்சல் கார்சன் எழுதிய மௌன வசந்தம் எனும் சூழலியல் அழிவு சார் விழிப்புணர்வு நூல் எழுந்தது. இதன் சம காலத்துடன் அமெரிக்க பிரெஞ்ச் நிலங்களில் பெண்ணிய சிந்தனைகளும் வலுப்பெற்றன. 

1975 இல் பிரான்ஸை சேர்ந்த Francoise d'Eaubonne  (இணையத்தில் கிடைக்கும் இவர் வாழ்க்கை குறிப்பு சுவாரஸ்யம் மிக்கது) பெண்ணியத்தையும் சூழலியலையும் கோட்பாட்டு ரீதியாக இணைத்து எக்கோஃ பெமினிசம் என்ற அடிப்படையை உருவாக்கினார்.  (இந்தியாவில் மரங்கள் வெட்டப் படுவதை எதிர்த்து பெண்கள் போராடிய சிட்கோ இயக்கம் துவங்கி, நர்மதை நதிஅணை திட்ட போராட்ட ஆளுமை மேத்தா பட்கர் வரை இங்கே அத்தகு வரையரைக்குள் வரும் வரிசை ஒன்று உண்டு. இந்தியாவில் மரங்கள் நதிகள் எல்லாமே பெண்மை என்று இந்திய ஆழ் மனதில் பதிந்த அந்த நிலையின் வெளிப்பாடே மேத்தா பட்கர் போன்ற ஆளுமைகள் பெற்ற வெற்றி என்பதை அறிவோம்). இந்த எக்கோ ஃபெமினிசம் எனும் சட்டகத்துக்குள் இன்றுவரை உலக புகழ் பெற்ற போலிகள் பலர் செயல்பட்டாலும், உண்மையும் திவிரமும் கொண்ட ஆளுமைகளால் இந்த கருத்தாக்கம் கொண்ட செயல் வடிவம் ஒரு கால் நூற்றாண்டு உலகு முழுதும் சீரிய பல ஆக்கப்பூர்வ விளைவுகளை உருவாக்கவே செய்தது.

2000 கு பிறகான நுகர்வு பொருளாதாரம் இந்த சூழலியல் அழிவு எதிர்ப்பாளர் தடையை உடைக்க சமூக ஊடகங்களையும்,  பல்கலைக்கழகங்கள் வழியே உருவாக்கிய, உள்ளுறையாக மெய்யான  தத்துவச் சிக்கல் ஏதும் இல்லாத போலி கோட்பாடுகளையும், அதைப் பரவச் செய்யும் வெற்று ஆளுமைகளையும் உற்பத்தி செய்து எல்லா தளங்களிலும் உலவ விட்டது. அவர்களின் முதல் இலக்கு எக்கோஃபெமினிசம் என்பதன் ஒவ்வொரு கருத்தியல் அடித்தளத்தையும் உடைப்பது. பெண் என்று துவங்கினால், இந்த வரையரையில் இருந்தே ஆதிக்கம் துவங்குகிறது  என்பார்கள். அங்கிருந்து பிறன், ஆண்மைய்ய நோக்கு, சுரண்டல், ஆதிக்கம், அதிகாரம் என்றெல்லாம் விரித்து கொண்டே செல்வார்கள். பெண்ணும் இயற்கையும் என்று துவங்கினால், மேற்கண்ட வரிசையின் படி இயற்கைக்கு பால் பேதம் கற்பிக்கும் இந்த வரையரையில் இருந்து, பெண் என்ற வரையறை வழியே ஆதிக்கம் கொண்டு அவளை கீழாக ஆக்குவதை போலவே அவளை உயர்வு நவிற்சி வழியே வரையறை செய்வதும் இன்னொரு வகை ஆதிக்கமே என்றெல்லாம் துவங்கி களமாடுவார்கள்.

இப்படி வாசித்து செல்கையில் அத்தகு அந்தர கோஷ்டி ஒன்றின் வசைபாடல் வழியாகவே அப்படி வசைமழையில் நனைந்த பல கவிதைகளில் ஒன்றாக ஒக்டோவியா ப்பாஸ் ஸ்பானிஷ் இல் எழுதி, அதை மர்ரியல் ருக்கிசர் ஆங்கிலத்தில் 

இன் ஹர் ஸ்பிலண்டர் ஐலாண்டட் எனும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருந்த கீழ்கண்ட அழகிய கவிதையை கண்டடைந்தேன்.

IN HER SPLENDOR ISLANDED

Spanish poem

By

OCTAVIO PAZ

translated by 

MURIEL RUKEYSER

அவளது பேரெழில் தீவுத்தொகையில்

அவளது பேரெழில் தீவுத்தொகையில்


இந்தப் பெண் வசீகரிக்கும் ஆபரணம் போலும்

சுடர்கிறாள்.


உறங்குமோர் அச்சுறுத்தும் படையணி.


இவ்விரனுள் இப்பெண் 

மூடிய கண்களின் கீழ் தெளிந்த நீர் போலும்

படுத்திருக்கிறாள்

மர நிழலில்.


எழுவிசை அருவியொன்று ஸ்தம்பித்து நிற்கிறது

தனது  பாதி வழியில்.



பாய்விசை  நதியொன்று.

சட்டென உறைந்து விட்டது பெரும் வழுகுப்பாறையொன்றின்  அடியில்.


மலையடிவாரத்தில் சித்திரைமாதப் பொய்கை போலும் அவள் படுத்திருக்கிறாள்.



பாப்லரும் 

தைல இலைகளும் பிணைந்ததவளது அடியாழம்


மீன்களோ விண்மீன்களோ எரிகின்றன

அவளது தொடைகளுக்கு இடையே.



பறவைகளின் நிழல்

அவள் பகம் மறைக்கும்

அரிதாக.


அமைதியான வானின் கீழ் அசைவிலா  சிறுகுடிகள்

அவளிரு கொங்கைகள்.


இப்பெண் இங்கே படுத்திருக்கிறாள் 

ஒரு வெண்கல் போல.

நிலவின் 

துஞ்சிய எரிமலைவாய் 

நீர் போல.


எவ்வொலியுமில்லா இரவில்


பாசியோ மணலோ அல்ல

நீரின் செவியில்

தசையின் செவியில்

மெல்ல மொக்கவிழ்வது

எனது சொற்கள் மட்டுமே.


விரைவற்று ஓடும்

தெளிந்த நினைவாக

இங்கே மீள்கிறது இந்த எரியும் தருணம் 


தன்னில் தான்மூழ்கி


ஒருபோதும் நுகராது...

உலகின் மிகப் பழமையான, வேட்டைச் சமூக மானுடம் கொண்ட சிலையான வீனஸ் ஆஃப் வில்யுன்ட்ராஃப் சிலைக்கு வயது 32 000. தனங்களும் புட்டங்களும் தொடைகளும் பண்டியும் பல மடங்கு பெருத்த, முகமற்ற சிலை. தொடர் பிறவி அளிக்கும் மரணமின்மையின் குறியீடு. குன்றா வளம் என்பதன் குறியீடு. கொல்லப்பட்டும், கொன்று புசித்தும் வாழும் ஆதி மானுட வேட்டைச் சமூகம் ஒன்று, தொடர் பிறவி அளிக்கும் ஒருவளை கூட்டு உள்ளுணர்வால் இயற்கையின் மையப் பகுதியாக ஆற்றலின் வடிவமாகக் கண்டு வணங்கியது என்பது எத்தகையதொரு ஆத்மீக பரிணாம வளர்ச்சி. அதை ஆணாதிக்க சதி என்று மட்டுமே புரிந்து கொள்வோர் எத்தகு பேதையர்.

X X எனும் ஆதிப் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் X Y எனும் ஆண் மரபணு. அது Y அல்ல இரண்டு கால்களில் ஒன்று இல்லாத X தான் அது. மானுட குலம் என்பது X X எனும் பெண் மரபணு கொண்ட ம்யூடேஷன் வேறுபாடுதான் என்று கூறுகிறது மரபணுவியல். அதாவது மனித குலத்துக்குத் தந்தை உண்டா? அது யார்? தெரியாது. ஆனால் தாய் நிச்சயம் உண்டு அவள் யார் என்றும் தெரியும் இது மரபணுவியல் உண்மை. இந்த உண்மையை அறிந்த இன்றைய மானுடனுக்கும் 32000 வருடத்துக்கு முந்திய ஆதி மானுடனுக்கும் இடையே சாராம்சத்தில் வேறுபாடு என்றோ தொலைவு என்றோ  ஏதும் உண்டா என்ன?

விந்தணுவை ஆண் என்றும் அண்டத்தை பெண் என்றும் கொண்டால், பலநூறு விந்தணுக்களின் இடையே போட்டியிட்டு முன்னேறி மண்டையால் முட்டி அண்டத்தை பிளந்து உள்ளே நுழையும் ஒன்றே பிறந்து நிற்கும் மனித உயிர் என்ற இதுகாறும் நிலைபெற்றிருந்த உடற்கூறு அறிவியல் முடிவு மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. அண்டம் ( கருணை கொண்டு ?!!) தன்னுள்  அனுமதிக்கும் விந்தணுவே உலகுக்கு வரும் மனிதவுயிர் என்ற நிலை நோக்கி அந்த முடிவு மாறிக்கொண்டிருக்கிறது. 

( உண்மையாக இருக்கவே வாய்ப்பு மிகுதி. இல்லையேல் உடல் முதல் அறிவு வரை அனைத்திலும் சோப்ளாங்கியான நான் இப் பூவுலகில் வந்துதிக்க  வேறு காரணம் இருக்க வாய்ப்பு இல்லை)

ஆதி மானுடமும் அறிவியலும் கண்ட இவற்றை கவிஞன் தனது கனவு கொண்டு சென்று தொட்டுவிட மாட்டானா என்ன? ப்பாஸ் அத்தகு கவிஞர்களுள் ஒருவர். ஒக்கடாவியோ ப்பாஸின் சில கவிதைகள் இந்தியத் தன்மை கொண்டவை அத்தகு இந்தியத் தன்மை கொண்ட கவிதைகளில் ஒன்று இது. பெண்ணை பெண்மை எனும் கடலில் ஒரு துளி என காண்பது. பெண்மையை ஆற்றல் எனும் கடலில் ஒரு துளி என காண்பது. அந்த ஆற்றலை இயற்கையின் பகைப்புலத்தில் வைத்து காண்பது என இக்கவிதை கொண்ட  அனைத்துமே இந்திய ஆத்மீகத்தின் சாக்த தரிசன மரபுக்கு மிக அணுக்கமானது.

ஜெயமோகன் வாசகர் எவரும் கொற்றவை நாவலில் கோவலன் கண்ணகியை நீங்கும் தருணம் மீதான சித்தரிப்பு போல, ஜெயமோகன் புனைவுலகின் பல்வேறு தருணங்களுடன் இக் கவிதை இணைந்து அதன் கற்பனை அர்த்த சாத்தியங்கள் விரிவதை உடனடியாகவே அறிய முடியும்.

இக் கவிதையை வாசகனுக்குள் அனுபவ விரிவாக்கமாக மாற்றும் இதன் ஆன்மாவை விளக்குவதும் விவாதிப்பதும் விவேகமன்று. மாறாக இக் கவிதை கொண்ட உடலையும் அழகையும் சற்றேனும் அணுகி உரையாடினால், இக்கவிதையின் உடல் 

ஆண் × பெண்

நீர் × நிலம்

நீர் × நெருப்பு

வானம் × பூமி

மலை × மடு

உயரம் × ஆழம்

பாசி × மணல்

ஆற்றல் × நிலைத்ததன்மை

பிரம்மாண்டம் × தன்னிலை

என பல்வேறு எதிரிடைகளால் கட்டப்பட்டிருப்பதை காணலாம்.

இதன் அழகு என்பது முதன்மையாக இதன் உவமைகளில் வர்ணனைகளில் இலங்குகிறது. 

கண்வளரும் அந்தப் பெண் சுற்றிலும் நீர் சூழ்ந்து பிற நிலங்களுடன் தொடர்பு இல்லாத தீவுத் தொகை போல இருக்கிறாள். தீவுத் தொகை என்பது மைய்யத்தில் ஒரு பெரிய தீவும், சுற்றிலும் சிறிய தீவுகளும் கொண்ட நில அமைப்பு. அதில் சுடரும் ஒரு வசீகர ஆபரணம் போல அவள் இருக்கிறாள்.

மூடிய இமைகளின் கீழ் உறையும் நீர்மை போல படுத்திருக்கிறாள். அச்சம் விளைவிக்கும் ராணுவ ஆற்றல் ஒன்று இப்போது ஓய்வில் இருப்பது போல படுத்திருக்கிறாள்.

கணத்தில் உறைந்து விட்ட வீழும் அருவியின், பாயும் நதியின் ஆற்றலின் தூல வடிவம் போலும் படுத்திருக்கிறாள்.

(கவிதை நிகழ்ந்த நிலம் சார்ந்து) ஏப்ரல் மாதம் எனில் உறைபனி காலம் முடிந்து விட்ட, அடுத்த பருவம் மெல்ல மெல்ல துவங்கும் நிலையில் உள்ள மலையடிவார பொய்கை நீர் போல அவள் படுத்திருக்கிறாள்.

அமைதியான வானின் கீழ் தூரத்தில் இருந்து பார்க்க அசைவே இல்லாதது என தோன்றும் இரண்டு மலை கிராமங்கள் போல அவள் கொங்கைகள். அவள் நிர்வாண இடைக் கரவை மறைக்கும் எப்போதேனும் மேலே கடந்து செல்லும் பறவைகளின் நிழல்

பாப்லர் மர இலைகள் முதுமையின் அல்லது விடை பெறுதலின் குறியீடு. தைல மர இலைகள் மருத்துவத்தின் உயிர்தெழுதலின் குறியீடு. இவை முயங்கியது அவள் கொண்ட ஆழம்.

கடலடியில் மனிதன் அறிய இயன்ற அளவு ஆழத்தில் இருளில் சுடரும் மீன்கள் உண்டு. வானத்தில் மனிதன் அறிய இயன்ற அளவு உயரத்தில் தூரத்தில் சுடரும் விண் மீன்கள் உண்டு. இத்தகு பிரம்மாண்டம் அவள் இடைக்கரவில் அடக்கம்.

இத்தகையவள் ஒரு சிறிய வெள்ளைக் கூழாங்கல் போல படுத்திருக்கிறாள்

இத்தனைக்கும் பிறகு அவள் நிலாப் பரப்பில், ஓய்ந்த எரிமலை வாயில் நிறைந்து நிற்கும் நீர் போல இருக்கிறாள். 

எளிய தன்னிலை ஒன்றால் நுகர முடியாத இத்தகைய பிரம்மாண்டமான ஒருவளை குறித்து மீளும் எரியும் நினைவுகள் மீதான கவிதை.

இந்த கவிதை கொண்ட மிக முக்கிய எதிரிடைகளில் ஒன்று இயற்கை அனுபவம் × நுகரும் அனுபவம் எனும் எதிரிடை. இயற்கை அனுபவம் மற்றும் நுகரும் அனுபவம் இவற்றுக்கு இடையேயான பேதம் என்ன? 

இயற்கை அனுபவம் ஐம்புலன்கள் வழியே ஒவ்வொரு கணமும் நிறைவது. அந்த அனுபவத்தின் கட்டுப்பாட்டில்தான் நாம் இருக்கிறோமே அன்றி நமது கட்டிருப்பாட்டில் அந்த அனுபவம் இல்லை. அந்த அனுபவத்தில் நமது தேர்வு என்று எதையும் செய்ய முடியாது. அதில் எதையும் சேர்க்கவோ கழிக்கவோ முடியாது. 

நுகர்ச்சி அனுபவத்தில் அந்த அனுபவத்துக்கு நாம்தான் எஜமானன். அந்த அனுபவத்தை தேர்ந்தெடுக்க முடியும். நமக்கு தேவையான விஷயங்களை சேர்க்கவும் தேவயற்றத்தை நீக்கவும் முடியும். மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொள்ள முடியும். தேவையான போது வெளியேறவும் முடியும்.

பெண் அவள் இயல்பில் யாரோ அந்த இயற்கை இயல்பில் அவளை தரிசித்து, ஆனால் நுகர்வு அனுபவம் வழியாக மட்டுமே அனுபவித்து வாழ அறிந்த ஒரு தன்னிலை இயலாமைப் பெருமூச்சுடன் அவளை விட்டு விலகி நிற்கும் உணர்வுநிலை மீதான தனித்துவமான கவிதை. 

இந்த வானம், பூமி, நிலா, காற்று எல்லாமே உன்னுடையதுதான் உன்னுடைய தலை கை கால்கள் சுவாசம் உடல் அளவுக்கே உன்னுடையது. எல்லாம் நீ அனுபவிக்கவே. ஆனால் இது எதுவும் நீ 'நுகர்வதற்கான' உன்னுடைய 'உடமை'யல்ல. காரணம் இவை எவற்றில் இருந்தும் பிரிந்து தனியாக நீ இல்லை. அப்படி தனியாக நான் இல்லை என்பதை அறிந்து, இயற்கையை 'நுகராமல்' மாறாக இயற்கையை 'அறிந்து உணரும்' அனுபவிக்கும் நிலையை புஞ்சிதா எனும் சொல்லால் குறிக்கிறார் குரு நித்ய சைதன்ய யதி.

அந்த புஞ்சிதா எனும் நிலையை அறியாத, ஆனால் இயற்கையின் சக்தி தரிசனத்தை கண்டு திகைத்து, நுகர்வதன்றி தன்னிடம் வேறு கருவிகள் இல்லாத தன்னிலை ஒன்று பெருமூச்சுடன் சொல்லும் சொற்களில் எழுந்த அழகிய கவிதை ப்பாஸின் மேற்கண்ட கவிதை.

(பின்குறிப்பு: கவிதையின் தமிழ் மொழியாக்கம் கடலூர் சீனுவாகிய என்னுடையது. ஸ்பானிஷ் இல் இருந்து இந்தக் கவிதை கவிதையாகவே அங்கிலத்துக்கு வர எந்த அளவு சுதந்திரம் எடுத்துக்கொள்ளப் பட்டதோ அதே அளவு சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கவிதை இது. 'சுதந்திரமான'  மொழியாக்கம்தானேயன்றி 'பிழையான' மொழியாக்கம் அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.

பாப்லர் என்பதற்கு தமிழ் இல்லை.

வழுகு எனில் வழவழப்பான மேற்பரப்பு என்று பொருள்.)


பகம் எனில் பெண் ஜனனஸ்தானம். சொல் உபயம் திரு நாஞ்சில் நாடன்.

***

Share:

அகமென்னும் வீடு - கமலதேவி

கவிஞர் விக்ரமாதித்யனின் வீடு சார்ந்த இரண்டு கவிதைகள் பிரிவுத்துயரை, ஒரு கவிஞனின் அலைகழிப்பை தன்னுள் கொண்டுள்ளன.

ஒரு வீடென்பது தனியொரு மனிதனை போல. அதனால் தான் ஒவ்வொரு வீடும் சுவாரஸ்யமானது. இன்னொரு பார்வையில் இன்றுள்ள சூழலில் ஒரே மாதிரி வார்க்கப்படும் மனிதர்களையும் வீடுகளையும் இந்தக்கவிதைகள் மனதில் கொண்டு வருகின்றன. 

வாசலில் நின்று வழியனுப்பும் தலைவியும்,வெளியில் திரியும் ஒரு மனிதனின் சித்திரமும் விரியும் கவிதைகள் இவை. 

வீடு விசித்தரமானது. உள்ளே இருக்கும் போது வெளியே தள்ளவும் வெளியே இருக்கும் போது நம்மை ஓயாது அழைக்கும் ஒன்று.

முதல் கவிதை வீட்டை பேசுவதன் மூலம் மனதையும், இரண்டாம் கவிதை மனதை பேசுவதன் மூலம் வீட்டையும் பேசுகிறது.

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய் போல

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காகப்

பிரிந்து வந்து கொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக்கொள்ள

வீட்டைவிட்டு வெளியேறும் இந்தக்கவிதைக்கு மாற்றாக வீடுதிரும்புதல் என்ற கவிதை உள்ளது. இந்தக்கவிதையில் வீடு என்பது மனதின் அலைகழிப்பாக மாறியுள்ளது. ஒரு கடல் போல வீடு ஒருவனை உள்ளிழுக்கவும் வெளியே தள்ளவுமாக இருக்கும் வீட்டை அவன் தன்னுள் உணர்கிறான். இந்தக்கவிதையில் ரூபமான ஒன்று அரூபமாக மாறுகிறது. கவிஞனின் மனம்  இருளுக்குள்  திரும்பிச்செல்ல உள்ள எண்ணற்ற சாத்தியங்களில்  தன்னிடம் தான் திரும்புதல் நிகழ்ந்துள்ள கவிதை இது.

ஏனெனில் வீடென்பது எல்லோருக்கும் அம்மா. அம்மா  என்பது  திரும்புதல் மட்டுமே சாத்தியமுள்ள வெளி. அவளே வீடு..ஒரு வகையில் அவளே நம் மனமும் கூட. 

வீடு திரும்புதல்

எதற்காக வீடு

திரும்பவேண்டும் நாம்

யார் எதிர்பார்த்துக்

கொண்டிருக்கிறார்கள் நம்மை

சொந்த வீடு

உண்டா நமக்கு

வீடென்பது இடமா

விரும்பும் மனமா

வீடென்றால்

எல்லோருக்குமே அம்மா

பிறகு வந்தவொரு

பெரியமனசுக்காரி

அவள் வயிற்றில்

உதித்த குழந்தைகள்

தோட்டத்துக் கனகாம்பரங்கள்

வேப்பமரம் கல்யாணமுருங்கை

முற்றத்துக் கொடிப்பசலி

தேடிவரும் பூனைக்குட்டிகள்

நட்ட நடுநிசியிலும்

தெருவில் லாந்தும் நாய்கள்

ஊருக்குக் கொஞ்சம் தள்ளி

ஓடும் ஆறு

சாலையோரம் குடிகொண்டிருக்கும்

இசக்கியம்மன்

அரிவாளைத் தூக்கி நிற்கும்

சுடலை மாடசாமி

கோட்டை போலிருக்கும்

கோயிலுக்குள்ளே

நிற்கிறானா அமர்ந்திருக்கிறானா

என்று சொல்ல முடியாத

எங்கள் ஆதிசிவன்

நின்று

அருள்பாலிக்கும் அம்மை

ஊருக்குள்

இருக்கிறது வீடு

வீட்டிற்குள்

இருக்கிறார்கள் பிரியமானவர்கள்

பிரியப்பட்டவர்களைத்தாம்

தேடுகிறது உள்மனசு

வீடு கிட்டத்தில்

இருக்க வேண்டும்

வேண்டியவர்கள்

பக்கத்தில் இருக்க வேண்டும்

வீடுதொலைத்து 

வெளியில் திரியும்

ஒருவன் வரிகள் இவை

வீட்டைவிட்டு

வெளியில் ஏன் வருகிறோம்

வேலை தேடி

பஞ்சம் பிழைக்க

பணம் சம்பாதிக்க

பசிக்குப் பதில் சொல்ல

பிறகு எதற்கு 

வீடுதிரும்ப வேண்டும்

வீடென்பது கனவு

வெளியென்பது எதார்த்தம்

வீடும் வெளியுமாய்த்தான்

விளங்குகிறது

உன் வீடு உன்னைக் கூப்பிடும் மாதிரி

என்ன வைத்திருக்கிறது

வீட்டிலும் வெளியைப்போலவே

பொய்களைப் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொள்வாயா

வீடற்றவர்களை எப்பொழுதாவது

நினைத்துப் பார்த்திருக்கிறாயா

அப்பன் விரட்டி

அம்மை விரட்டி

அடுத்து பிள்ளைகளும்

இரக்கமில்லாமல் விரட்டி

வெறுத்துப்போய்த் தனிவீடு

உண்டாக்கிக்கொண்டான்

கவிதையில் இவன்

அந்த வீடுதான் இவன்

இவன்தான் அந்த வீடு

நிழல் இருள் பாடல்.

***

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

கவிதையின் தோற்றுவாய்கள் - அரவிந்தர் (தமிழில் சியாம்)

கிரேக்க தொன்மத்தின் விண்ணக குதிரையான பெகாசஸ் படிமத்தில், கலை உத்வேகத்தின் துரிதம் பொதிந்துள்ளது. பாறை மீதான அக்குதிரையின் குழம்படிகளிலிருந்தே ஹிப்போகிறீன் (Hippocrene) வழிந்தோடுகிறது. கவிதையின் நீர் ஓர் ஒழுக்கில் ஓடுகிறது. அதில் தடங்கலும் மறுப்பும் வருமாகையில், அது அவ்வொழுக்கிலுள்ள  தடங்கலின் குறியீடு. அல்லது, அந்நீர் தனது தடமாகத் தேர்வுசெய்த மனதின் குறைபாட்டின் குறியீடு. இந்தியாவில் நாம் அதே கருத்தை கொண்டுள்ளோம். சரஸ்வதி நமக்கு கவிதையின் இறைவி; அவளது பெயர் ‘ஒழுக்கு’ அல்லது ‘வழிபவள்’ என்ற பொருள் கொண்டது. ஆனால் அவளுக்கும் மேல் உள்ளவள் கங்கை. கங்கையே தூண்டுதலின்(inspiration) தாய். இமயத்தில் அமர்ந்திருக்கும் மகாதேவனின் தலையிலிருந்து பெருக்காக கீழே வழிபவள். எல்லா கவிதையும் தூண்டுதலே, மேலிருந்து சிந்தனை உறுப்பிற்குள் சுவாசிக்கப்பட்டது, மனதில் அது பதியப்பட்டது, ஆனால் அது, மனதை கடந்த உயர் தரிசனம் அல்லது நேரடி ஞானத்திலிருந்து பிறந்தது. அது உண்மையில் ஒரு பிரகடனம்2 (revelation). தீர்க்கதரிசன அல்லது பிரகடன ஆற்றல் கருவை(substance) காண்கிறது, தூண்டுதல் சரியான வெளிப்பாட்டை கண்டுணர்கிறது. அது உற்பத்தி செய்யப்படுவதல்ல. கவிதை இயற்றப்படுவதும் படைக்கப்படுவதும் கூட அல்ல. சாசுவதமாக இருக்கும் ஒன்றின் பிரகடனம். பண்டைய காலத்தவர் இவ்வுண்மையை அறிந்திருந்தனர், கவிஞனுக்கும் தீர்க்க தரிசிக்கும்(prophet), படைப்பாளிக்கும் ஞானிக்கும்(seer), தெய்வமெழுந்த பாடகனுக்கும் (vates) ஒரே சொல்லை பயன்படுத்தியுள்ளனர், கவி.

ஆனால் வெளிப்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன. மனம் நிச்சலனமாக இருக்கையில், உச்சமான ஒன்று மூளைக்கு அப்பாற்பட்டும் வெளியிலும், ஆயிர இதழ் தாமரைக்கு கூட அப்பாற்பட்டு தனக்குரிய எல்லைகளில் இயங்கும்போதே கவிதையின் மகத்தான இயக்கம் நிகழ்கிறது. அப்பொழுது வெளிப்படுவது வேதமாகிறது, முழுமையான கருவும் சாசுவத உண்மையின் வெளிப்பாடும். எப்படி மேதைமை சாதாரண அறிவுத்திறனையும் புலன் உணர்வையும் கடந்ததோ அது போல இந்த உயர் கருத்துருவாக்கமும்(ideation) மேதைமையை கடந்தது. ஆனால் இந்த மகத்தான இயல்பு, நமது வளர்ச்சி நிலைக்கு அப்பாற்பட்டது. பொதுவாக மனதின் இரண்டாம்நிலை, நீர்த்த, நிச்சயமற்ற செயல்முறையினால் வெளிப்பாடும் தூண்டுதலும் உருவாக்கப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் இந்த இரண்டாம்நிலை, தாழ்ந்த செயல்முறையே ஷேக்ஸ்பியரையும் ஹோமரையும் வால்மீகியையும் நமக்கு அளிக்கும் அளவு மகத்தானது. நமது அறிவின் மூன்று உளக் கருவிகள்- இதயம் அல்லது உணர்வுரீதியான மனது(emotinoally realising mind), உற்றுநோக்கும் matrum தர்க்கசார்(observing and reasoning) அறிவுத்திறன் அதன் துணையான நினைவாற்றலுடன், மற்றும் கவிஞனை ஊடகமாகக் கொண்டு உயர்ந்த கவிதை தன்னை தானே எழுதிக்கொள்ளும்பொழுது உச்சமான ஒன்று தூண்டுதலை கொண்டு செல்லும் இறுதிகட்ட உள்ளுணர்வு அறிவுத்திறன்(intuitive intellect). உள்ளுணர்வு அறிவுத்திறன் இயல்பாக இயங்கும் அளவு வலிமை இல்லாத பொழுது, கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனுக்கு செல்வதை விட, உணர்வு மற்றும் ஊக்கம்(passion) நிறைந்த இதயத்துக்கு செல்வது நல்லது.

தர்க்கசார் அறிவுத்திறன் கொண்டு எழுத்தப்பட்ட கவிதை உயர்த்தப்பட்டதாக மேம்படுத்தப்பட்டதாக இல்லாமல் அறிவார்ந்த அகந்தை, தர்க்கம், விவாதம், உண்மைத்தன்மை அற்ற(rhetorical), பகட்டான, எதிரொலிகள் மற்றும் நகலெடுப்பு நிறைந்ததாக இருக்கும். சிலநேரங்களில் இதுவே செவ்வியல் கவிதை என்று அழைக்கப்படுவது. போப் (Alexander Pope) மற்றும் டிரைடன் (John Dryden) கவிதை போல ஆற்றல்மிக்க சிறப்பான ஆனால் உணர்ச்சியற்ற உயர்த்தப்படாத கவிதை. அது அதன் தூண்டுதல்களை, உண்மையை, மதிப்பை கொண்டுள்ளது. அதன் போக்கில் கவரக்கூடியது. ஆனால் அது உயர்த்தப்பட்டு உள்ளுணர்வுசார் அறிவுத்திறனுக்குள் நுழைகையில் அல்லது அதில் இதயம் உள் நுழைகையில் அது மகத்தானதாக மாறுகிறது. ஒளிக்கு பதில் கனலும், தெளிவிற்கு பதில் உந்து விசையும், கச்சிதத்திற்கு பதில் தீவிரமும் தேவைப்படும் எல்லாவற்றுக்கும் இதயமே சரியான கருவி. கவிதை மகத்தானதாக இருக்க தீவிரமோ பரவசமோ தேவை.

இருப்பினும், இதயத்திலிருந்து எழுந்துவரும் கவிதை தெளிவற்ற நீரொழுக்கு. நமது அவச கருத்துக்களும் கற்பனைகளும் மேலிருந்து வரும் தூய உட்பாய்வுடனும் கீழிலிருந்து வரும் கட்டற்ற எழுச்சியுடனும் கலக்கிறது, நமது எழுச்சிபெற்ற உணர்ச்சிகள் மிகையான வெளிப்பாட்டை கண்டடைகின்றன. நமது அழகியல் இயல்புகளும் முன்தீர்மானங்களும் வரம்பிற்கு மீறிய நிறையுணர்வை கோருவதில் முனைகின்றன. அவை தூண்டுதலால் எழுதப்பட்ட கவிதைகளாக இருக்கலாம், ஆனால் அவை இன்றியமையாதவை அல்ல தகுந்தவை அல்ல. பெரும்பாலும் இரட்டை தூண்டுதல் இருக்கின்றன, உயர்ந்த அல்லது பரவச தூண்டுதல் மற்றும் கீழான அல்லது உணர்ச்சிகர தூண்டுதல். கீழான தூண்டுதல் சலனம் ஏற்படுத்தி உயர்ந்த தூண்டுதலை கீழிழுகின்றது. இது தான் மிகையுணர்ச்சிகொண்ட அல்லது கற்பனாவாத கவிதையின் பிறப்பு. சரியான தளங்களிலிருந்து நேரடியாக வரும் சிறந்த கவிதை வெறுமையோடும்(bare) வலிமையோடும், பகட்டற்றும் மேன்மையோடும், வளமோடும் அழகோடும், தன் விருப்பப்படி கற்பனாவாதத் தன்மையோடும் செவ்வியல் தன்மையோடும் இருக்கலாம். ஆனால் அது தனது நோக்கத்தை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.                      

ஆனால், உள்ளணர்வு அறிவுத்திறனின் உயர்ந்த தளங்களில் உள்ள தூண்டுதல்களில் கூட குறைபாடுகள் இருக்கலாம். கவிதையின் உண்மையான மொழியைத் தவறவிடக்கூடிய போலியான தடையின்மை உள்ளது. அது பார்வையின் மங்கலில் இருந்து வருவது. தான் உண்மையான தூண்டுதலுக்கு உட்பட்ட எழுத்து என்ற மனப்பதிவினால் நிலைகுலையா தட்டைத் தன்மையுடன் இருக்கிறது. சொல்லவேண்டியதை சொல்லுகிறது. ஆனால் விசையின்றியும் ஆனந்தமின்றியும், அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வதில்லை. இது தாமச அல்லது மூட்டமான உந்துதல். செயல் கூடியது, ஆனால் சுய-அறியாமையாலும்  அறிவொளியின்மையாலும் நிறைந்தது. பார்க்கக்கூடியது சரியாகவும் நல்லதாகவும் உள்ளது, அது சரியான வெளிப்பாட்டுடன் இணைந்தால் மிக உன்னதமான கவிதையை உருவாக்கலாம். ஆனால் அது செயற்கையாக சகித்துக்கொள்ள இயலாதவாறு வரிகளாக வெட்டப்பட்ட உரைநடையாக மாறிவிடுகிறது. வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) தாமச தூண்டுதலின் பண்புக்கூறுகள் கொண்டவர் அதற்கு பெரிதும் ஆளானவர். வேறொருவகையான தாமச உந்துதல் இருக்கிறது, குறையற்ற வெளிப்பாட்டை அளிக்கக்கூடியது, ஆனால் அதன் கரு மனிதனுக்கு ஆர்வமூட்டக்கூடியதாகவோ கடவுளுக்கு மகிழ்வளிப்பதாகவோ இல்லை. மில்டனில்(Milton) பெரும்பகுதி இந்த வகைமைக்கு கீழ் வரக்கூடியது. இரண்டு வகைமைகளிலும், தூண்டுதலோ பிரகடனமோ செயல்நிலையில்(active) இருக்கிறது, ஆனால் அதற்கு இணையாக செயல்படவேண்டிய இயக்கம் படைப்பில் இணைய மறுத்துள்ளது.

மேலிருந்து பிரகடனமோ தூண்டுதலோ இல்லாமல், மனம் வடிவத்திலும் கருவிலும் செயல்படும்போது மதிக்கத்தக்க அல்லது முக்கியமற்ற கவிதை உருவாகிறது. மதிப்பீடு(judgement) நினைவு மற்றும் கற்பனை ஆகியவை செயல்படலாம், மொழியாளுமை கூட அதில் இருக்கலாம், ஆனால் அறிவுதிறனின் விசைக்கு மேலான ஒன்று இணையாக செயல்படவில்லை என்றால் அது ஆற்றல் விரயம். அந்த படைப்பு மதிப்பை அடையலாம் இறவாமையை அடையமுடியாது. டாக்ரல்(Doggerel) மற்றும் பாஸ்டர்ட்(Bastard) கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனிலிருந்து கூட எழுவதில்லை, மாறாக புலன் அறிவித்திறனிலிருந்து அல்லது செயலற்ற(passive) நினைவிலிருந்து எழுகின்றன. ஓசை மற்றும் உணர்ச்சிகளின் பௌதிக இன்பத்தால் வழிநடத்தப்படுகின்றன. அது துணிவானது, ஆர்பாட்டமிக்கது, நகலெடுப்பது, பண்பற்றது(vulgar); அடிப்படை தூண்டுதலையும் ஆனந்தத்தையும் கடந்து செல்லமுடியாத அறிவுத்திறன் மற்றும் கற்பனையின் தொகுதி அது. ஆனால், புலன் உணர்வு மனதில் கூட, உயர் சுயத்திலிருந்து வரக்கூடிய செயல்பாட்டிற்கான சாத்தியக்கூறு உள்ளது. புலன் உணர்வு சார்ந்து யோசிக்க கூடிய விலங்குகளுக்கு கூட கடவுள் வெளிப்பாடுகளையும் தூண்டுதல்களையும் அளித்துள்ளார். அதை உயிரியலாக உள்ள உணர்வு(instict) என்கிறோம். அது போன்ற சூழ்நிலைகளில் பாஸ்டர்ட் கவிதை கூட ஒருவித மதிப்பும் இன்றியமையாமையும் கொள்ளக்கூடியதுதான். புலன் உணர்வு மனிதனில் உள்ள கவிஞன் முழுதாக நிறைவடையலாம், மகிழ்வடையலாம் அல்லது மிகவும் மேம்பட்ட மனிதனில் உள்ள புலன் உணர்வுக்கூறு கவித்துவ நிறைவை அடையலாம். சிறந்த பாலட் கவிதையும் மெக்காலே (Macaulay)கவிதைகளும் இதற்கு உதாரணங்கள். ஸ்காட்(Scott) ஒரு விதத்தில் புலன் உணர்வுக்கும் அறிவுசார்கவிதைக்கும் இடையிலுள்ள இணைப்பு.

மற்றொரு வகையான பொய்யான தூண்டுதல் ராஜஸ அல்லது கிளர்ந்து எழுகிற உந்துதல். அது தாமசம் போன்று தட்டையானதும் பயனற்றதும் இல்லை. ஆனால் அவசமிக்கது, பொறுமையற்றது, கர்வமிக்கது(vain). இரண்டாம்பட்ச சிறந்த வெளிப்பாட்டை அடையும் ஆர்வத்தில் முயற்சியை ஒதுக்குகிறது. ராஜஸ கவிஞர்கள், தாங்கள் எழுதியதில் குறைபாட்டை உணர்ந்தாலும், அதை துறக்கத் தயங்குகிறார்கள். ஏனெனில், அதில் உள்ள மதிப்புமிக்கவற்றில் அல்லது அது முதலில் எழுதப்பட்டபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்தின் நினைவில் பிணைந்துள்ளார்கள். இன்னும் மேம்பட்ட ஒரு வெளிப்பாட்டை அல்லது முழுமையான நோக்கை அடைந்தால் கூட, அவர்கள் காதல் கொண்டுள்ள கீழான விஷயத்தை முழுதாக அழிக்காமல், மீட்டுக் கூறவே விரும்புகிறார்கள். சிலநேரங்களில், உதவியின்றி அந்த ஆழமற்ற ஆவேசமான பிரவாகத்தில் தத்தளித்தாலும் போராடினாலும், இன்றியமையாமையுடன் அதை வெளிப்படுத்துவத்தில் இறுதி வெற்றியடையாமல், அவர்கள் ஒரு கருத்தை மட்டும் மாற்றிக்கொள்கிறார்கள் அல்லது அதே கற்பனையில் தொடர்கிறார்கள். ஷெல்லியும்(Shelley) ஸ்பென்ஸரும்(Spenser) ராஜஸ உந்துதலின் உதாரணங்கள். ஆனால் சில ஆங்கில கவிஞர்கள் இதிலிருந்து வெளிவந்தவர்கள். கிளர்ந்து எழக்கூடிய உந்துதல் கருவை திசை கெடுத்து, தடை உண்டாக்குவது. சிந்தனையை, கற்பனையை கட்டுப்படுத்த வரம்பிற்குள் இருத்த விருப்பமின்மையும் சுய-கட்டுப்பாடின்மையும் ராஜஸ குணத்தின் குறியீடுகள். அதில், கருவின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தீர்த்துவிட, சிந்தனையையும் கற்பனா பார்வைகளையும் தகுந்த எல்லையைக் கடந்து விஸ்தரிக்க ஒரு முயற்சி உள்ளது. அப்படியில்லை எனில் உண்மையான கருத்துரு மறுக்கப்படுகிறது, அல்லது அதற்கு பதிலாக கவர்ச்சியான மற்றும் வெளிப்படையாக பயன் நிறைவுடைய ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சொன்ன பண்புகொண்டவர் கீட்ஸ்(Keats) எலிஸபெத்திய கவிஞர்கள் (Elizabethans) இரண்டாவது பண்புகொண்டவர்கள். ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால படைப்புகள் செவ்வியலின் உதாரணமாக உள்ளன. கிரேக்க இலக்கியம் போல் இல்லாமல் ஆங்கில இலக்கியம் ராஜசமானது. கிரேக்கர்கள் உருவாக்கியதை விட அழகானவை ஆங்கிலத்தில் இருந்தாலும், அதில் பெரிதாக போற்றப்படுகிற பகுதிகள்கூட வளமானைவ மற்றும் மெச்சத்தகுந்தவையே தவிர மகத்தானவையோ உண்மையானவையோ அல்ல.

உள்ளுணர்வு அறிவுத்திறனில் முழுமையான தூண்டுதல் என்பது சாத்வீக அல்லது ஒளிமிக்க தூண்டுதல். பாரபட்சமற்றது, தன்னிறைவு கொண்டது, உறுதியில்(will) உன்னதமானது, வளமையானது அல்லது ஆற்றல்மிக்கது. தனது பார்வையை சொல்லவேண்டியவற்றின் மேல் மட்டும் செலுத்துவது, அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வது. அது உணர்ச்சிகள் அல்லது ஆர்வம் தனது முழுமையை குறுக்கிட அனுமதிப்பதில்லை. ஆனால் இத்தன்மை அதை பரவசத்திலிருந்து பேரானந்தத்திலிருந்து விலக்கிவைப்பதில்லை. மாறாக, அதன் சுய-ஆனந்தம் பிற தூண்டுதல்களைவிட தூய்மையானது அழகானது. அது உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், ஆணையிட்டு அதை பயன்படுத்திக்கொள்கிறது. தன்னுடைய ஒளியுடன் நிதானத்துடன் தெளிவுடன் இணைந்த சாத்வீக உந்துதல் கண்டிப்பாக வளமையை விசையை அல்லது தூண்டுகிற உணர்ச்சியை அவை தேவையென்றபோதும் விலக்கலாம். அனைத்து கவிதைகளும் இல்லையென்றாலும் பெரும்பாலும் மேத்யு அர்னால்டின் (Mathew Arnold) கவிதை இந்த வகையானதே. ஆனால் இது எல்லைக்குட்பட்ட ஒரு தூண்டுதல். தூண்டுதலற்ற அறிவுத்திறனிலிருந்து சாத்வீக மற்றும் ராஜஸ கவிதை எழுதப்படலாம். ஆனால் புலன் உணர்வுசார் மனம் எப்பொழுதும் சாத்வீக கவிதையை பிறப்பிக்க முடியாது.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஒரு கவிஞன் ஆழ்ந்து சிந்திக்கும் விமர்சகனாக இருக்க வேண்டியதில்லை. அவனது கவிதையை அவனே பகுப்பாய்வு மற்றும் பிரித்தாய்வு செய்யும் அறிவுத்திறனை கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் முழுமையாக இருக்க ஓரளவேனும் அவன் இரண்டு விஷயங்களை கொண்டிருக்க வேண்டும். ஒன்று, ஒரே பார்வையில் தான் அடைந்திருக்கும் கருத்துரு சிறந்ததா அல்லது  இரண்டாம்பட்சமானதா என்பது பற்றி, வெளிப்பாட்டின் முழுமை பற்றி, கவிதையின் இசைவு பற்றி, சொல்லும் உள்ளுணர்வு மதிப்பீடு. இரண்டு, பகுப்பாய்வு இன்றியே எதனால் சிறந்தது இரண்டாம்பட்சமானது, முழுமையானது முழுமையற்றது என்று சொல்லும் உள்ளுணர்வு அறிவு. பிரகடனம் அல்லது தீர்க்கதரிசனம், தூண்டுதல், உள்ளுணர்வு மதிப்பீடு மற்றும் உள்ளுணர்வு அறிவு என்ற நான்கு இயல்புகளே, படைப்பூக்க ஞானம் மற்றும் புரிதல் கொண்டு படைப்புகளை உருவாக்கும் மேதையின் முழுமையான கருவிகள்.                                                   

குறிப்புகள்:

  • Hippocrene- கிரேக்க புராணங்களில், ஹிப்போக்ரீன் என்பது ஹெலிகான் மலையில் உள்ள ஒரு நீரூற்று. இலக்கிய அல்லது கவிதை தூண்டுதலை ககுறிப்பது.
  • ‘Revelation’ என்ற சொல் கட்டுரையில் ஆன்மீக தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வெளிப்பாடு’ என்ற பொருள் கொண்ட பிற சொற்கள் கட்டுரையில் உள்ளதால் ‘Revelation’ என்பதற்கு அழுத்தம் தர, தனித்துக் காட்ட ‘பிரகடனம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
***


ஸ்ரீ அரவிந்தர் 1910-1913ல் எழுதிய ‘Essays Divine and Human’ என்ற தொகுப்பிலுள்ள ‘The sources of poetry’ என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

***

Share:

வ. அதியமானின் குடைக்காவல் - மதார்

கவிஞன் ஒரு விஷயத்தை கவிதையாகப் பார்த்துவிடுகிறபோது பல சமயங்களில் அவன் அதை அப்படியே எழுதிவிடுவது மட்டும் கூட நல்ல கவிதையாகிவிடும். 

வ.அதியமானின் குடைக்காவல் தொகுப்பில் வரும் "அழகி" என்ற கவிதை

அழகி 

பிடுங்கி எடுத்துவிட்டப் பிறகுதான்

அடக்க ஒடுக்கமாய்

உங்கள் கைகளில்

கிழங்காய் இருக்கிறேன்

அதற்கு முன்புவரையில்

சூரியப் பையன்

முத்தமிட ஏங்கும்

அடங்காத

பாதாள

பேரழகியாக இருந்தேன்

புதையல் புதையலாக இருக்கும் கணம் மட்டுமே அது புதையல் என்பதை அழகாகச் சொல்லிவிடுகிறது கவிதை. இந்தக் கவிதை நிகழ மேலதிகமாக எதுவும் தேவைப்படவில்லை. உணர்ந்ததை உண்மையாகச் சொல்வது மட்டுமே நல்ல கவிதைக்கு போதுமானதாகிறது. 

இதே தொகுப்பில் வரும் இன்னொரு கவிதை

அசைவுகளை நடனத்திற்கு இழுத்து வரும் நளினம்

இமைக்காது

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

அசைவுகள்

அசைவுகள்

அசைவுகள்


ஒன்றாய் 

பத்தாய் 

நூறாய் 

ஊறிப் பெருகிக்கொண்டே இருக்கும்

அசைவுகள்


எதிர்பாரா 

இமைக்கணத்தில் 

என் கண்களின் மீது 

தாவி குதித்துச் செல்கிறது 

ஒரு பச்சைத் தவளை


கடவுளே 

இப்போது 

அந்த அசைவுகள் 

அத்தனையும் 

நடனம் 

நடனம் 

நடனம் 

இதுவும் கிழங்கு கவிதை போலவே பார்த்ததை அப்படியே பதிகிற கவிதை. ஆனால் இந்தக் கவிதைக்கு கூடுதலாக ஒரு பச்சைத் தவளை கவிதையை நிகழ்த்தத் தேவையாய் இருக்கிறது. கவிதைக்கு எது தேவையோ அதைக் கவிதையே தேர்ந்துகொள்ளும். பின் தொடர்வது மட்டுமே கவிஞனின் வேலை. இந்தக் குடைக்காவல் தொகுப்பின் பல கவிதைகளில் வ.அதியமான் கவிதையை வழி பிசகாமல் பின்தொடர்ந்திருக்கிறார். 

தத்தலுக்கும் தாவலுக்கும் நடுவே ஒரு லபக்

இன்று

என்ன கொண்டாட்டமோ

தெரியவில்லை

தோட்டத்தில்

சதா

தத்தி

தத்தி

விளையாடிக் கொண்டேயிருக்கிறது

அடர்மஞ்சள்

ஓணான் ஒன்று


அங்கு வந்து சேர்ந்த

தெருநாய் ஒன்று

எதிர்பாரா கணத்தில்

தன் நான்கு கால்களையும்

நான்கு சிறகுகளாக்கி

சீறித் தாவுகிறது

சில கவிதைகளில் 'தலைப்பு' கவிதையை இயக்கும். இந்தக் கவிதை அப்படிப்பட்டது. காட்சியை சித்தரிப்பதை மட்டும் இந்தக் கவிதை செய்கிறது. 


குலசாமி

வேகவேகமாய் 

படியிறங்கிக் கொண்டிருக்கின்றன 

என் கால்கள் 

படிகளின் நடுவே 

உடைந்து 

உதிர்ந்து 

இல்லாமல் போய்விட்ட ஒரு படி 

இமைக்கணத்தில் 

என் குலசாமியானது 

அதற்கு அடுத்தப்படியிலிருந்து 

மெல்ல மெல்ல 

படியிறங்கிக் கொண்டிருக்கிறேன் 

நான் 

வாசகன் தன் அனுபவத்தில் விரித்துச் செல்ல பல தளங்களைக் கொண்ட கவிதை. உடைந்து உதிர்ந்து இல்லாமல் போன பல வாழ்க்கைகள் நினைவுக்கு வருகின்றன. 

பெருங்கை

ஏற்றப்படும்

சுடர் ஒன்று

ஓர் காட்சியை

வரைந்து கொடுக்கிறது

உங்கள் கண்களுக்கு

சமயங்களில்

வரைந்து கொடுக்காமலும்

போகலாம்


ஆனால்

அணைக்கப்படும்

சுடர் ஒன்று

மிக நிச்சயமாய்

எப்போதும்

ஓர் காட்சியை

மறைத்து வைக்கிறது

உங்கள் கண்களிடமிருந்து


அணைக்கப்படும்

சுடர் ஒன்றுக்கு

அத்தனை பெரிய கைகள்

ஒவ்வொரு இரவிலும் சூடம் அணைவதை நான் பார்த்து நிற்பதுண்டு. நெருப்பு பூமிக்கு அடியில் தினமும் ஒளிந்து கொள்வதைத்தான் நெருப்பு அணைகிறது என்று சொல்கிறோமோ என்று தோன்றும். அதை ஒரு கவிதையாக்க முயற்சித்தேன். இயலவில்லை (பின்னர் எழுதிவிடுவேன்). இந்தக் கவிதை அதுதான். இதில் சுடரின் கைகள் என்பது புதிதாகச் சேர்ந்து அழகாகிறது. 

இந்தத் தொகுப்பில் வரும் "வனவாசி" கவிதை அழகானது. 


வனவாசி

இத்தனை விரிந்த

திருவிழா வனத்தில்

ஒரு விழியும் அறியா

சின்னஞ்சிறு துயர் செடிகளை

மிகச் சரியாய்

அடையாளம் கண்டு கொள்ளும்

கண்கள்

உனக்கு


இத்தனை செறிந்த

துயர் கானகத்தில்

எவர் கைக்கும் எட்டா

சின்னஞ்சிறு திருவிழா பூக்களை

மிக லாவகமாய்

எட்டிப் பறித்துவிடும்

விரல்கள்

எனக்கு


உன்

கண்களையும்

என்

விரல்களையும்

ஒருங்கே கொண்டிருக்கும்


நம்முடைய இளைய மகள் இங்கிருக்கும் 

அத்தனை வனங்களிலும் 

ஒரே சமயத்தில் நுழைகிறாள்


அவள் கண்களை 

வருடிக் கொடுக்கின்றன 

குட்டிப் பூக்கள் 

அவள் விரல்களை 

தொட்டு உரசுகின்றன 

தளிர்ச் செடிகள்


அவளோ 

எதையும் 

பார்ப்பதுவும் இல்லை 

பறிப்பதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு 'இன்று' மட்டுமே. இந்தக் கவிதையும் 'இன்றில்' மகிழும் குழந்தையைப் பேசுகிறது.

வ.அதியமானின் மொழி எளிமையானது. கவிதைகள் நேரடியானவை. படித்து முடித்ததும் அழகை மனதில் உதிக்க வைப்பவை. இன்னும் அவர் நிறைய கவிதைகளை எழுத வேண்டும். கவிதையை வாழ்வாக்க வேண்டும்.  

***

தொகுப்பு : குடைக்காவல் - வ.அதியமான்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive